அரக்கோணம் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ்அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. ராணுவ வீரர். இருவக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மோகனா (22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மோகனா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமூர்த்தி விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த மோகனா, விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், திருமூர்த்தி அளவுக்கு அதிகமாக மதுஅருந்தி வந்துள்ளார். இதனை கண்டித்ததால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், திருமணமான 3 ஆண்டுகளில் மோகனா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.