இருசக்கர வாகனத்தில் புகுந்த 8 அடி நீள கருஞ்சாரை பாம்பு... ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் புகுந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பினை, பாம்புபிடி வீரர் லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விடுவிடுத்தார்.
ஈரோடு கனிரவுத்திரம்குளம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுத்து உள்ளார். அப்போது, வாகனத்தின் முன் பகுதியிலிருந்து வித்தியாசமான முறையில் சத்தம் கேட்டுள்ளது. அத்துடன் இன்ஜின் பகுதியில் மர்மபொருள் ஒன்று வளைந்து நெளிந்து சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சேட்டு, இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, வாகனத்தின் முன் பகுதியில் பிரித்து பார்த்துள்ளார். அப்போது இன்ஜின் பகுதியில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக பாம்பு பிடி வீரர் ஹரி என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பாம்புபிடி வீரர் ஹரி, இருசக்கர வாகனத்தை பரிசோதனை செய்தபோது அதில் சுமார் 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு படுத்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர், வாகனத்தில் இருந்த கருஞ்சாரை பாம்பை லாவகமாக பிடித்து வெளியே எடுத்தார். தொடர்ந்து, அந்த பாம்பை பத்திரமாக வனப்பகுதியில் சென்று விட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.