குமரி அருகே குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவர் பலி!

 
drowned

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே குளத்தில் தவறி விழுந்து 9ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள அம்சி கோய்க்காவிளை பகுதியை சேர்ந்தவர் ரகுகுமார். இவரது மகன் சந்தோஷ்(14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த சந்தோஷ், நேற்று நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர்.

kumari

இதனை அடுத்து, அருகில் உள்ளவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது, சிறுவன் சந்தோஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கடை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சந்தோஷின் தந்தை ரகுகுமார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.