உசிலம்பட்டி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு - போலீசார் விசாரணை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். தொழிலாளி. இவரது மனைவி ரெஜினா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன் ரெஜினாவுக்கு பிரசவத்தில் 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், நேற்று குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி பெற்றோர் உசிலம்பட்டி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி போலீசார், குழந்தை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததா? அல்லது 2-வதும் பெண்ணாக பிறந்ததால் சிசு கொலை செய்யப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.