தஞ்சை அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(62). இவர் அந்த பகுதியில் பலகார கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு, நாகராஜன் பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், போலீசார் நாகராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு, தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுந்தர்ராஜன், முதியவர் நாகராஜனுக்கு 27 வருட கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.