வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி... தலைவாசல் அருகே சோகம்!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள கோவிந்தம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் - தமிழ் பிரியா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் சாத்விக் என்கிற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மாலை குழந்தை சாத்விக் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்களது வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாய் தமிழ்பிரியா மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று குழந்தையை மீட்டு உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை சாத்விக் உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தலைவாசல் போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.