வால்பாறை அருகே நிமோனியா பாதிப்பால் குட்டி யானை உயிரிழப்பு!

 
elephant

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தனியோர் காப்பி தோட்டத்தில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட தனியார் காப்பி தோட்டத்தில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதனை கண்ட தோட்ட தொழிலாளர்கள், மானாம்பள்ளி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

elephant

தொடர்ந்து, வனத்துறை கால்நடை உதவி மருத்துவர் சுகுமார் தலைமையில், இறந்த குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிவில் இறந்தது  4 முதல் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், நிமோனியா பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, வனத்துறையினர் அதே பகுதியில் குழிதோண்டி யானையின் உடலை புதைத்தனர்.