ராமநாதபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்து... கட்டிட தொழிலாளர்கள் இருவர் பலி!
ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்கால் பகுதியை சேர்ந்தவர்கள் தனிக்கொடி (24) மற்றும் அருண் (26). கட்டிட தொழிலாளர்களான இவர்கள் நேற்று நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடை எடுப்பதற்காக 2 இருசக்கர வாகனங்களில் ராமநாதபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். தனிக்கொடி, அருண் மற்றும் மற்றொரு நபர் ஒரே வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கீழக்கரை - திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் தோணி பாலம் அருகே சென்றபோது, இவர்களது இருசக்கர வாகன மீது எதிரே வந்த கர்நாடக மாநில கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த தனிகாடி, அருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு நபர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார், காயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.