காவேரிபட்டணம் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது கார் மோதல் - ஓருவர் பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே தனியார் பள்ளி பேருந்தின் மீது கார் மோதிய விபத்தில் ஓருவர் உயிரிழந்தார்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் ஐசக். இவர் இன்று காலை கிருஷ்ணகிரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள எர்ரஅள்ளி பகுதியில் சென்றபோது, முன்னால் தனியார் பள்ளி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தின் பின் பகுதியில் கார் அதிவேமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரை ஓட்டிவந்த ஜெயராஜ் ஐசக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டணம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.