திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து... புது மணப்பெண் உள்பட மூவர் பலி!

 
accident

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புதுமணப்பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள நெய்க்காரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு, கடந்த திங்கட்கிழமை ஜீவிதா (21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று புதுமண தம்பதியர் காரில் கோவிலுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். திருச்செங்கோடு அருகே புளியம்பட்டி பகுதியில் சென்றபோது காரும், எதிரே திருச்செங்கோடு நோக்கி சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் சென்ற ஜீவிதாவும், இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சுப்பிரமணி(50), சுரேஷ் ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராமகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். 

tiruchengode

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு ஊரக போலீசார், காயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.