குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் அடித்துக்கொலை... தேனி அருகே கொடூரம்!

 
murder

தேனி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய சென்ற கார் ஓட்டுநர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தேனி அருகே உள்ள பூதிப்புரம் கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது வீட்டின் அருகே, அதே பகுதியை சேர்ந்த ஊர்காளப்பன் என்பவர் குப்பையை கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் நேற்று மதுபோதையில் ஊர்காளப்பனை அவர் சார்ந்த சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு அவதுறாக பேசியதாக கூறப்படுகிறது.

dead body

அப்போது, அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகேந்திர குமார்(57) என்பவர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, ராதாகிருஷ்ணனை தட்டுக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகேந்திரகுமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் மகேந்திரகுமார் மயங்கிய நிலையில், அவரை குடும்பத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

தகவலின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார், மகேந்திரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மகேந்திரகுமார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து  கலைந்து சென்றனர்.