விளக்கு ஏற்றியபோது ஆடையில் தீ பற்றியதில் கல்லூரி மாணவி பலி!
திருச்சியில் விளக்கு ஏற்றியபோது உடையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்.ஓ.பி காலனியில் வசித்து வருபவர் சிவராஜ். இவரது மகள் அபிநயா(18). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அபிநயா வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது உடலை தீப்பற்றியுள்ளது. இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் அபிநயா அலறி துடித்துள்ளார்.
இதனை கண்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர் பற்றிய தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை, சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அபிநயா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை சிவராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.