எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் படுகாயமடைந்த விவசாயி பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே எருது விழாவின்போது காளை முட்டியதில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள புலியரசு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த செவ்வாய்க்கிழமை எருது விடும் விழா நடைபெற்றது. இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்த போட்டியை காண வந்த சென்றாயன் கவுண்டனூரை சேர்ந்த விவசாயி ராமசாமி(55) என்பவர் காளை முட்டியதில் படுகாயமடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராமசாமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.