தாத்தையங்கார்பேட்டை அருகே விவசாயி வெட்டி படுகொலை... மனநிலை பாதிக்கப்பட்ட நபர் வெறிச்செயல்!

 
trichy

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகே விவசாயி மனநிலை பாதிக்கப்பட்ட நபரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை அடுத்த  கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்(66). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை(50). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் ஆடுகள் மேய்த்துக்கொண்டும், கூலி வேலை செய்தும் வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை துரைராஜ் வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவரது வீட்டின் அருகே சென்றபோது பின்னால் அரிவாளுடன் வந்த செல்லத்துரை,  துரைராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

Murder

இதில் துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது செல்லத்துரையின் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. கொலை செய்த பின்னர்,  துரைராஜின் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த செல்லதுரை பின்னர் சடலத்தின் அருகே படுத்துக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் தாத்தையங்கார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  கொலையான துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, செல்லதுரையை கைது செய்த போலீசார், பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.