வாளையாறு அருகே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு... கேரள வனத்துறையினர் விசாரணை!

 
elephant

கேரள மாநிலம் கஞ்சிக்கோடு - வாளையாறு இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 20 வயது பெண் யானை ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மதுக்கரை முதல் கேரள எல்லையில் உள்ள வாளையாறு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு வனப்பகுதி வழியாக தமிழகம் - கேரள மாநிலங்களுக்கு இடையே ரயில்வே பாதை  அமைந்துள்ளது. இந்த வழியாக நாள்தோறும் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்ததால், தமிழக வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள், ஒலி எழுப்பி கருவிகளும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

elephant

இந்த நிலையில், கேரள மாநிலம் கஞ்சிக்கோடு - வாளையாறு இடையே 12-வது கிலோ மீட்டரில் உள்ள கொட்டாம்பட்டி என்ற இடத்தில் நேற்றிரவு 17 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளன. தொடர்ந்து, இன்று அதிகாலை 3.40 மணி அளவில் அந்த யானைக்கூட்டம் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளன. அப்போது, கன்னியாகுமரியில் இருந்து அசாம் நோக்கி சென்ற விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும், அந்த யானையுடன் வந்த குட்டி யானை அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது. இது குறித்து ரயில் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் கேரள மாநில வனத்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் மோதி யானை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.