கோவையில் பழைய இரும்பு குடோனில் நள்ளிரவில் தீ விபத்து... பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

 
fire

கோவை செட்டிபாளையத்தில் நேற்றிரவு தனியாருக்கு சொந்தமான பழைய இரும்பு  குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கோவை மாவட்டம் போத்தனூர் - செட்டிபாளையம் சாலையில், அரசு பணியாளர் குடியிருப்பு அருகே வசீப் ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென  தீ பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்திற்குள் மளமளவென குடோன் முழுவதும் தீ பரவியது. இதனால் குடோன் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

fire

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், குடோன் மின் இணைப்பை துண்டித்துவிட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து குடோன் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.