தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த சிறுமி பலி... காஞ்சிபுரத்தில் சோகம்!
காஞ்சிபுரத்தில் தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது 6 வயது மகள் பிரதியா. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணையை, தண்ணீர் என நினைத்து சிறுமி குடித்துள்ளார். சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து குடும்பத்தினர் அவரிடம் விசாரித்தபோது, அவர் மண்ணெண்ணையை குடித்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கடந்த 4 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பிரதியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த சிறுமி பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.