ஒட்டன்சத்திரம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதல் - முதியவர் பலி!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த இலக்கையன்கோட்டை அரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (70). விவசாயி. இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். எல்லப்பட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது முனியாண்டி இருசக்கர வாகனம் மீது குமுளியில் இருந்து பழனி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் முனியாண்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து ஒட்டன்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த முனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து முனியாண்டியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து அரசுப்பேருந்து ஒட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.