ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை மீட்க சென்றவர்கள் மீது லாரி மோதல் - 2 லாரி ஓட்டுநர்கள் பலி!

 
accident

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கியவரை மீட்க முயன்றவர்கள் மீது லாரி மோதியதில், 2 லாரி ஒட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் பொய்கை பகுதியை சேர்ந்தவர் வினோத் (30).  ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று நள்ளிரவு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.  ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியில் சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ சாலையின் மையத்தில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி கவிழ்ந்தது. அப்போது, அந்த வழியாக  லாரியில் கோழி ஏற்றிவந்த லாரி ஓட்டுநர், குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சரவணன் (38), மற்றாரு லாரியில் அரிசி ஏற்றி வந்த ஓட்டுநர் ராஜா (50) மற்றும் 2 லாரிகளின் உதவியாளர்கள்  சுந்தர மூர்த்தி, கிருஷ்ணன் ஆகியோர், ஆட்டோவில் சிக்கி உயிருக்கு போராடிய வினோத்தை மீட்க முயன்றனர்.

ambur

அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர்கள் சரவணன், ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உதவியாளர்கள் சுந்தர மூர்த்தி, கிருஷ்ணன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், விபத்தில் பலியான லாரி ஓட்டுநர்கள்  சரவணன், ராஜா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் வினோத் மதுபோதையில்  ஆட்டோவை ஓட்டியது தெரியவந்தது. மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.