பெரம்பலூர் அருகே ஏரியில் மூழ்கி ஒரு வயது ஆண் குழந்தை பலி!

 
drowned

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒரு வயது ஆண் குழந்தை ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சின்னாத்தாள். இவர்களுக்கு ஒரு வயதில் ஆகாஷ் என்ற ஆண் குழந்தை உள்ளார். பிரபாகரன் வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை சின்னத்தாள் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்துக்கு பின் அவர் வந்தபோது, குழந்தை ஆகாஷை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். அப்போது, வீட்டின் அருகில் உள்ள உப்பேரியில் குழந்தை மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

perambalur gh

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் குழந்தை ஆகாஷின் உடலை மீட்டனர். தொடர்ந்து, குன்னம் போலீசார், உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 1 வயது குழந்தை ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.