திருச்சி அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலி!

 
accident

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சாலையோர புளிய மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(40). தொழிலாளி. இவர் நேற்றிரவு சிறுகனூர் - தச்சங்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அன்பழகன் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கொணலை அருகே தனியார் பொறியியல் கல்லூரி பிரிவு சாலையில் உள்ள மண் பாதையில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது, அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

dead body

இரவு நேரம் என்பதால் விபத்து குறித்து யாருக்கும் தெரியவில்லை. இன்று காலை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் அன்பழகன் சடலமாக கிடப்பதை கண்டு, சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.