பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!
பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி விடுதியில் கேரளாவை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் விஷ்ணு (19). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்போது செமஸ்டர் தேர்வுகள் முடிந்ததால் விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலான மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால், விஷ்ணு விடுதியிலேயே தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற விஷ்ணு மதியம் விடுதிக்கு திரும்பி உள்ளார்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர் அறைக்கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த விடுதி மாணவர்கள் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது, விஷ்ணு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் விஷ்ணு தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.