திசையன்விளை அருகே பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து - 2 தொழிலாளர்கள் பலி!

 
accident

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த சங்கனாங்களம் பகுதியில் தனியார் அழைப்பிதழ் அச்சடிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை காசிமேட்டை சேர்ந்த சாம்ராஜ்(35) மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வரதராஜன்(28) ஆகியோர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்துக்கு சொந்தமான அறையில் தங்கி பணிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு வரதராஜன், சாம்ராஜ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திசையன்விளை அடுத்த குமாரபுரம் பகுதியில் சென்றபோது அவர்களது இருசக்கர வாகனம் மீது எதிரே பெட்ரோல் ஏற்றிவந்த டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

thisayanvilai

இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.