தெருக்கூத்தில் ஆடிய நாடகக் கலைஞர் மயங்கி விழுந்து பலி... சத்தியமங்கலம் அருகே சோகம்!

 
sathyamangalam

சத்தியமங்கலம் அருகே தெருக்கூத்தில் ஆடிக்கொண்டிந்த கலைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஊக்கரம் ஊராட்சி குப்பந்துறை கிராமத்தை சேர்ந்த ராஜய்யன். தெருக்கூத்து கலைஞர். இவர் சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களின்போது தெருக்கூத்து நடத்தி வந்தார்.  இந்த நிலையில், நேற்று முன்தினம் குப்பந்துறை கிராமத்தில் மழை வேண்டி இரண்யா தெருக்கூத்து நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்த கூத்தில் ராஜய்யன் உள்ளிட்ட ஏராளமான தெருக்கூத்து கலைஞர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது, நடனமாடிக் கொண்டிருந்த ராஜய்யன் திடீரென மயங்கி விழுந்தார். 

sathyamangalam

இதனால் அதிர்ச்சியடைந்த சக கலைஞர்கள் அவரை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜய்யன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதனை அடுத்து, அவரது உடல் குப்பந்துறைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே தெருக்கூத்தில் நடனமாடிய படியே ராஜய்யன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.