நெல்லை அருகே பைக் மீது லாரி மோதி விபத்து - 2 சிறுவர்கள் பலி!

 
accident

நெல்லை அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கூட்டப்புளி கிராமத்தை சேர்ந்தவர் சாமி மகன் அந்தோணி பிரகாசம்(18). அதே பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் மகன் பிரமோஷ்(16), ஆரோக்கியம் மகன் ஆல்டன்(16). நண்பர்களான 3 பேரும், நேற்று இரவு பணக்குடிக்கு சென்றுவிட்டு, பின்னர் ஒரே இருசக்கர வாகனத்தில் கூட்டப்புளிக்கு திரும்பி கொண்டிருந்தனர். காவல் கிணறு அருகே உள்ள புண்ணியவாளன்புரம் பகுதியில் சென்றபோது அந்தோணி பிரகாசம் வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரமோஷ், ஆல்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

panagudi

மேலும், அந்தோணி பிரகாசம் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி போலீசார், விபத்தில் பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் கூட்டப்புளி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.