காங்கேயம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து... ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

 
accident

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பள்ளக்காட்டுபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(35). இவர் காங்கேயம் பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெறும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக விஸ்வநாதன், தனது மாமியார் மணி, உறவினர் ரமணன்(37), அவரது மனைவி உமாவதி ஆகியோருடன் காரில் சென்னிமலைக்கு சென்று கொண்டிருந்தார். 

dead body

காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை அருகே உள்ள பாரவலசு என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் மீது, எதிரே சாம்பல் பாரம் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் விஸ்வநாதன், அவரது மாமியார் மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ரமணன், அவரது மனைவி உமாவதி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, வழியிலேயே ரமணன் உயிரிழந்தார். இதனை அடுத்து, பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. தகவலின் பேரில் காங்கேயம் போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.