மதுபோதையில் இருந்த கணவரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி... கோவை அருகே பயங்கரம்!

 
cbe

கோவை போத்தனூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரின் தலை மீது கல்லைப்போட்டு கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார்புரம் சிவன்மலை பகுதியை சேர்ந்தவர் ரங்கன்(35). இவர் எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ளார். கோகிலா, அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார். இதனிடையே ரங்கனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் நாள் தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். 

murder

இந்த நிலையில், நேற்று விடுமுறையில் இருந்த ரங்கன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை கோகிலா கண்டித்ததால் கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, நேற்றிரவு இருவரும் வீட்டில் படுத்து தூங்கி உள்ளனர். கணவர் மதுஅருந்திவிட்டு தகராறு செய்வதால் ஆத்திரமடைந்த கோகிலா அவரை கொல்ல முடிவெடுத்தார். இதனை அடுத்து இரவு 11.30 மணி அளவில் வீட்டில் கிடந்த கருங்கல்லை எடுத்து ரங்கனின் தலையின் மீது போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரங்கன் வலியால் அலறி துடித்தார். 

அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ரங்கனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ரங்கன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் போத்தனுர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கோகிலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுபோதையில் தகராறு செய்த கணவரை மனைவி கல்லைபோட்டு கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.