டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை... கோவை அருகே பயங்கரம்!

 
murder

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை செட்டிப்பாளையம் அருகே மலுமிச்சம்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் பிரபாகரன் என்கிற நாகேஷ்(39). இவர் அந்த பகுதியில் உள்ள லேத் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரபாகரன், தனது நண்பர்களுடன் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அங்கு மதுபான பாருக்கு வெளியே நின்றிருந்த 5 பேர் கும்பலுக்கும், பிரபாகரனின் நண்பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, பிரபாகரன் நண்பர்களுடன் பாரில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளனர். 

coimbatore gh

அப்போது, அவர்களை காரில் பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல், இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபாகரன், அவரது நண்பர்கள் ஞானபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகியோரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதுடன், அவர்களை தாக்கி உள்ளனர். அப்போது, ஞானபிரகாஷும், தமிழ்செல்வனும் தப்பியோடிய நிலையில், மாட்டிக்கொண்ட பிரபாகரனை அந்த கும்பல் தென்னை மட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும், அருகில் கிடந்த சிமெண்ட் கல்லை அவரது தலையில் போட்டு தாக்கிவிட்டு, தப்பிச்சென்றனர். 

இதில் பலத்த காயமடைந்த பிரபாகரனை நண்பர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று பிரபாகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செட்டிப்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.