உடையார்பாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிலிச்சுகுழி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகுணா(32). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன் கண்ணன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை கண்ணன், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த சுகுணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் வீட்டிற்கு வந்த கண்ணன், சுகுணா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் போலீசார், சுகுணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சுகுணாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.