தேவக்கோட்டை அருகே கார் மோதி இளைஞர் பலி, 7 பேர் படுகாயம்!

 
accident

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கார் ஓட்டுநர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் சதிஷ்(25), கார்த்தி(26). உறவினர்களான இருவரும் நேற்று தேவக்கோட்டை அருகே சடையன்காடு பகுதியில் தனியார் மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் இருவரும் சாலையோரம் நின்று பேசி கொண்டிருந்தனர்.  அப்போது, அந்த வழியாக வந்த கார் ஓன்று எதிர்பாராத விதமாக இருவர் மீதும் அதிவேகமாக மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் நின்ற மினிவேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. 

devakottai

கார் மோதியதில் சதிஷ், கார்த்தி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.  அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதிஷ் உயிரிழந்தார். கார்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதேபோல், மினிவேன் மீது கார் மோதியதில் காரில் வந்த சோமசுந்தரம், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் வேனில் இருந்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் என 6 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆறாவயல் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.