சமையல் செய்தபோது ஆடையில் தீப்பற்றியதில் இளைஞர் பலி!

 
fire

ஈரோட்டில் சமையல் செய்தபோது ஆடையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு வி.வி.சி.ஆர். நகர்  இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் ராமன்குட்டி நாயர். இவரது இளைய மகன் மனோஜ் என்கிற மனோஜ் குமார்(42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று, மனோஜ்குமார் தனது வீட்டின் மாடியில் பொங்கல் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீ பற்றியது. சிறிது நேரத்திற்குள்ளாக அவர் உடல் முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது. இதனால் மனோஜ் குமார் அலறிதுடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்த்னர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

dead body

இந்த விபத்தில் மனோஜ்குமார் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று  சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை ராமன்குட்டி நாயர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.