மதுபோதையில் தகராறு செய்த இளைஞர்... தட்டிக்கேட்ட காவலருக்கு சரமாரி கத்திக்குத்து!

 
valangaiman

வலங்கைமான் அருகே மதுபோதையில் தகராறு செய்த இளைஞர், தன்னை தட்டிக்கேட்ட காவலரை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சூர்யா(27). கூலி தொழிலாளி. இவர் நேற்று அரித்துவாரமங்கலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில், காவலர் மணிகண்டன் (32) என்பவர் அங்கு சென்று தகராறில் ஈடுபட்ட சூர்யாவை கண்டித்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த சூர்யா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் மணிகண்டனின் கழுத்து மற்றும் காது பகுதியில் குத்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார்.

Murder

இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர் மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அரித்துவார மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சூர்யாவை தேடி வருகின்றனர். இதனிடையே, காவலரை குத்திய சூர்யா கத்தியுடன் சாலையில் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.