விழுப்புரம் அருகே மின்மோட்டாரை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

 
dead body

விழுப்புரம் அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியம் காங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கவின் (21). இவர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று காலை கவின் தங்களுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக கவின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதனிடையே, கவின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கரும்பு தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

vilupuram

அப்போது, அவர் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான உறவினர்கள், கவினை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கவின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் காணை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.