டிவியை சத்தமாக வைத்து பார்த்த முதியவர் மீது ஆசிட்வீச்சு... பக்கத்து வீட்டு இளைஞர் வெறிச்செயல்!

 
acid attack

கோவை செல்வபுரம் பகுதியில் தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தை குறைக்காததால் முதியவரின் முகத்தில், பக்கத்து வீட்டு இளைஞர் ஆசிய வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை செல்வபுரம் அருகே உள்ள சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்(70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அதிக சத்தம் வைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வீரமணி (30) என்பவர், முதியவர் சம்பத்தின் வீட்டிற்குள் புகுந்து, தொலைக்காட்சியின் சத்தத்தை குறைக்கும்படி கூறியுள்ளார்.

coimbatore gh

அப்போது, சம்பத் - வீரமணி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி, தனது வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து வந்து, முதியவர் சம்பத்தின் முகத்தில் வீசியுள்ளார். இதில் அவரது முகம், வாய் மற்றும் கண் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சம்பத் அலறி துடிக்கவே, அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிட்வீச்சு சம்பவம் குறித்து சம்பத், செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீரமணியை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.