உதகை அருகே காட்டு யானை தாக்கி ஆதிவாசி இளைஞர் பலி!

 
nilgiris

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த மாவனல்லா பகுதியில் ஒற்றை யானை தாக்கி ஆதிவாசி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாவனல்லா கிராமத்தை சேர்ந்தவர் மாதன்(55). குரும்பர் இன ஆதிவாசியான இவர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை மாதன் வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மசினகுடிக்கு சென்றிருந்தார். பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு மாவனல்லாவில் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

nilgiris

அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை மாதனை தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர் ஓடிச்சென்று பார்த்தபோது, மாதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அடுத்து, உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மசினகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மாவனல்லா பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை ஏற்கனவே 2 பேரை தாக்கி கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.