மார்த்தாண்டம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

 
rape

கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்தவர் அருளப்பன் மகன் சுஜின்(37). ஆட்டோ ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் முளகுமூடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி நாள்தோறும், சுஜினின் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியை பள்ளியில் இருந்து அழைத்து வந்தபோது, சுஜின் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை  வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். 

police

இந்த நிலையில், வீட்டிற்கு வந்த சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் ஆட்டோ ஓட்டுநர் சுஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 8 வயது சிறுமிக்கு ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.