குளித்தலை அருகே காளை முட்டியதில் முதியவர் பலி!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வளர்ப்பு காளை முட்டியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட கொக்ககவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசு (70). விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ராசு தனது வீட்டில் வளர்த்து வரும் காளை மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்றார். அப்போது, திடீரென அந்த காளை மாடு ராசுவை முட்டியது. இதில் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராசு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராவின் மனைவி சிறும்பாயி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காளை முட்டியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.