சேலம் அருகே மின்வேலியில் சிக்கி முதியவர் பலி!
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி செங்கெடி நகரை சேந்தவர் கொடிவேல் (56). நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இவர் நேற்று இரவு செந்தாரப்பட்டி அருகே உள்ள பலக்காடு கிராமத்தில் சங்கர் என்பவரது சோள தோட்டத்தில் உள்ள கிணற்றில் பதுங்கி உள்ள புறாக்களை பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில், தோட்ட உரிமையாளர் காட்டுபான்றிகள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் விதமாக இரவு நேரங்களில் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ச்சி உள்ளார். இதனை அறியாத கொடிவேல் கம்பி வேலியை தொட்டபோது, அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை தோட்டத்தில் கொடிவேல் சடலமாக கிடப்பதை கண்ட கிராம மக்கள் இதுகுறித்து தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்துர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தோட்ட உரிமையாளர் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.