கொசுவர்த்தியில் இருந்து தீ பற்றியதில் மூதாட்டி உடல் கருகி பலி... சிவகாசி அருகே சோகம்!

 
fire accident

சிவகாசி அருகே திருத்தங்கலில் கொசுவர்த்தி சுருளில் இருந்து கட்டிலில் தீப்பற்றியதில் மூதாட்டி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி மனைவி சிவபாக்கியம் (80). இவருக்கு காளிராஜன் என்ற மகனும், மாரியம்மாள், ஆறுமுகத்தாய் என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மூதாட்டி சிவபாக்கியத்தால் நடக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். இதனால் வரை, மகள்கள் இருவரும் கவனித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகள் இருவரும், சிவபாக்கியத்திற்கு உணவு கொடுத்துவிட்டு அவரை நைலான் கயிற்றால் ஆன கட்டிலில் படுக்கவைத்து விட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். 

sivakasi

இந்த நிலையில், நள்ளிரவில் எதிர்பாராத விதமாக கொசுவர்த்தியில் இருந்து நைலான் கயிற்று கட்டிலில் தீப்பற்றியது. இதில் கட்டிலில் படுத்திருந்த மூதாட்டி சிவபாக்கியம் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று மூதாட்டியை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூதாட்டி சிவபாக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.