அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரம்... மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்!

 
murder

தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணை, அவரது கணவர் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அண்ணா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (26). கார் ஓட்டுநர். இவருக்கு, கடந்த நவம்பர் மாதம் தாளமுத்து நகர் பகுதபாலதண்டாயுத நகரை சேர்ந்த மாரிசெல்வி (19) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பொன்ராஜ் கண்டித்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து, கடந்த வாரம் மாரிசெல்வியை அவரது தாய் மாரியம்மாள் வீட்டிற்கு கொண்டு விட்டுள்ளார். 

dead body

இந்த நிலையில், நேற்று இரவு மாரிச்செல்வியை சமாதானம் பேசி அழைத்து வருவதற்காக பொன்ராஜ், தனது நண்பர்கள் மந்திர மூர்த்தி(22), முத்துகுமார் ஆகியோருடன் மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, பொன்ராஜ் - மாரிசெல்வி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பொன்ராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிசெல்வியை சரமாரியாக வெட்டினார். மேலும், அதனை தடுக்க முயன்ற மாமியார் மாரியம்மாளையும் அவர் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாரிசெல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் தாளமுத்து நகர் போலீசார், மாரிசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த மாரியம்மாளையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.