சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சி... மர்மநபர்களுக்கு போலீசார் வலை!

 
chain snatching

தருமபுரியில் நேற்றிரவு சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி குமாரசாமி பேட்டை திரு வி.க.நகரில் வசித்து வருபவர் குயிலன். இவரது மனைவி லதா(45). இவர் நேற்றிரவு பால் வாங்கிக்கொண்டு தட்சிணாமூர்த்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென, லதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த லதா, தனது செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். அப்போது, கொள்ளையர்கள் இழுத்ததில் தரையில் விழுந்த லதா, செயினை பற்றியபடி அலறி துடித்தார். 

dharmapuri ttn

இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே, கொள்ளையர்கள் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் லதாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தருமபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 

அதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செயின் பறிப்பு  முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.