ஆத்தூர் நகராட்சி ஆணையர் கார் மோதியதில், கட்டிட தொழிலாளி பலி!

 
accident

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது, ஆத்தூர் நகராட்சி ஆணையர் வாகனம் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சக்திவேல்(35). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், சக்திவேல் நேற்று பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு, மாலை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் கல்பகனூரை சேர்ந்த செந்தில் என்பவரும் உடன் சென்றார்.

salem

பெத்தநாயக்கன்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே சென்றபோது, சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற ஆத்தூர் நகராட்சி ஆணையரின் கார், சக்திவேல் வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில்,  வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், செந்தில் பலத்த காயமடைந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் ஏத்தாப்பூர் சம்பவ இடத்திற்கு சென்று, சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து சக்திவேலின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.