ஓகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி வங்கி ஊழியர் பலி!

 
drowned

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களுரை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களுர் நந்தினி லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மகன் ஜேம்ஸ் பவுல்(22). இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று ஸ்ரீகாந்த், தனது குடும்பத்தினருடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், இறுதியாக ஆலம்பாடி காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ஜேம்ஸ் பவுல், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். 

hogenakkal

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காவிரி ஆற்றில் இறங்கி தேடினர். இந்த நிலையில், நேற்று மாலை ஆலம்பாடி காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் ஜேம்ஸ் பவுலின் உடல் மிதந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.