கிரிக்கெட் பந்து தாக்கி சிறுவன் உயிரிழப்பு... ராமநாதபுரம் அருகே சோகம்!

 
dead

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் பந்து தாக்கியதில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள வன்னிவயல் பகுதியை சேர்ந்தவர்கள் பழனிகுமார் - வனிதா தம்பதியினர். இவர்களது 3-வது மகன் சுபாஷ் குமார்(11). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை சுபாஷ்குமார், தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது, சிறுவன் ஒருவர் அடித்த பந்து, பீல்டிங் செய்து கொண்டிருந்த சுபாஷ்குமாரின் நெஞ்சில் பலமாக தாக்கியுள்ளது. இதில் நிலை குழைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார்.

ramnad gh

இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுபாஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில், நயினார்கோவில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பழனிகுமார் அளித்த புகாரின் பேரில், நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிரிக்கெட் பந்து தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.