ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே பைக் மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி!
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒருபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஷேக்முகமது(40) மற்றும் இதயதுல்லா. இவர்கள் பொள்ளாச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே சென்ற போது, ஷேக்முகமது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே சரவணம்பட்டியை சேர்ந்த கதிரவன் என்பவர் ஒட்டிவந்த சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஷேக்முகமது, இதயதுல்லா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை ஆழியார் போலீசார் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஷேக்முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இதயதுல்லாவுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஆழியார் போலீசார் விபத்தில் பலியான ஷேக்முகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநர் கதிரவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.