நெல்லை அருகே மீன்லாரி மீது கார் மோதல் - தாய், மகன் பலி!

 
accident

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே மீன் லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் மீன் வியாபாரி ஆறுமுகம். இவரது மனைவி குருவம்மாள். இவர்களது மகன் மணிகண்டன். இவர் தந்தைக்கு உதவியாக மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை மணிகண்டன், அவரது தாய் குருவம்மாள் ஆகியோர், உவரி பகுதியில் மீன்களை வாங்கிக் கொண்டு, தங்களுக்கு சொந்தமான மீன் லாரியில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். மணிகண்டன் லாரியை ஓட்டி வந்துள்ளார்.

nellai gh

மூன்றடைப்பு 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மீன் லாரியின் மீது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மீன் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குருவம்மாள் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குருவம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில், மூன்றடைப்பு போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.