பர்கூர் அருகே சாலை தடுப்பின் மீது கார் மோதல் - தந்தை, மகன் பலி!

 
accident

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சாலை தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் தருமபுரியை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மற்றும் அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் மோகன்(67). ஓய்வுபெற்ற வட்டாட்சியர். இவரது மனைவி சசிகலா. முன்னாள் துணை ஆட்சியர். இவர்களுக்கு ரமேஷ்(39), சங்கீதா என 2 பிள்ளைகள் உள்ளனர்.  இந்த நிலையில், நேற்று மோகன் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள சசிகலாவின் தாயார் வீட்டிற்கு மனைவி, பிள்ளைகள் மற்றும் 4 பேரக் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள அங்கிநாயனப்பள்ளி பகுதியில் சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோகன், சசிகலா, சங்கீதா, 4 சிறுவர்கள் என 7 பேர் காயமடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பர்கூர் போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.