வாளையாறு அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்; திருப்பூரை சேர்ந்த இருவர் பலி!

 
accident

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த வாளையாறு பகுதியில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் திருப்பூரை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் கூத்தம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலாஜி, முருகேசன். இவர்கள் சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளி நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள், பாலாஜியின் பனியன் நிறுவனத்துக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு அவர்களை கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு சென்று வழியனுப்பிய இருவரும், பின்னர் காரில் திருப்பூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களுடன்,  நண்பர்களான பக்ருதீன், மைனுதீன் ஆகியோரும் வந்தனர். 

accident

பாலக்காடு அடுத்த தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு ஆர்.டி.ஒ சோதனைச்சாவடி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் மீது, கார் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில், காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த பாலாஜி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பக்ருதீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை கண்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பக்ருதீனை மீட்டு பாலக்காடு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தகவல் அறிந்த வாளையாறு  போலீசார், உயிரிழந்த பாலாஜி, முருகேசன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வாளையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.