திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதி விபத்து : தந்தை, மகன் பலி!

 
accident

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் செந்தில்(47). இவர் அதே பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செந்தில், நேற்று மனைவி யசோதா(40), பிள்ளைகள் சக்தி பிரகாஷ் (22), சபி பிரபா(18) ஆகியோருடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தார். காரை சக்தி பிரகாஷ் ஓட்டிச் சென்றார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் மேம்பாலம் மீது சென்றபோது, சக்தி பிரகாஷ் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளார். 

dgl gh

அப்போது, எதிர்பாராத விதமாக லாரின் பின்புறம் கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரை ஓட்டிச் சென்ற சக்தி பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செந்தில், யசோதா, சபி பிரபா ஆகியோர் படுகாயம் அடைந்தனவர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே செந்தில் உயிரிழந்தார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யசோதா, அவரது மகள் சபி பிரபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் பேரில் வடமதுரை போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.