திருவாரூர் மாவட்டத்தில் திருடுபோன ரூ.12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு!

 
tvr

திருவாரூர் மாவட்டத்தில் திருடு போன மற்றும் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 90 செல்போன்களை மீட்டு, அவற்றை உரிமையாளர்களிடம் போலிசார் ஒப்படைத்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருடுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021- 22 ஆம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

tvr

அதன் பேரில், மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலம் தொடர் விசாரணை மேற்கொண்டு, காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள  90 செல்போன்களை கடந்த ஒரு மாதத்தில் மீட்டனர். இதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், சம்மந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை நேற்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

tvr

இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்பி விஜயகுமார், திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2021-22ஆம் ஆண்டில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக புகார் மனுக்களில் துரித விசாரணை நடத்தி 90 செல்போன்களை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள புகார் மனுக்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த சைபர் கிரைம் காவல் அலுவலர்களை, எஸ்.பி விஜயகுமார் பாராட்டி வெகுமதி வழங்கினார்.